சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் 2018ஆம் ஆண்டு வருடாந்திர விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் முரசின் மூன்று செய்திகள் நியமனமாகியுள்ளன.
தமிழ் முரசு செய்தியாளர் முஹம்மது ஃபைரோஸின் 'சிங்கப்பூர் காதல் கதை' ஆண்டின் தலைசிறந்த செய்தியாக நியமனம் பெற்றுள்ளது.
அதனுடன் தமிழ் முரசின் இணை ஆசிரியர் கனகலதாவின் 'என் அம்மா என் உலகம்', செய்தியாளர் எஸ் வெங்கடேஷ்வரனின் 'வீடு திரும்பும் ஆமைகள்' ஆகிய செய்திகளும் சிறந்த செய்திக்கான நியமனம் பெற்றுள்ளன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், நியூ பேப்பர், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு, தப்லா போன்ற ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவைச் சேர்ந்த செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் தலைசிறந்த செய்திகள் இந்த வருடாந்திர விருதுக்கு நியமனம் பெறும்.
இன்று மாலை எஸ்பிஎச் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.