தாமான் ஜூரோங்கில் அமைந்துள்ள காப்பிக் கடையில் இம்மாதம் மூன்றாம் தேதி நடந்த கைகலப்பின் தொடர்பில் இரு ஆடவர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இவ்விருவரும் இன்னொரு ஆடவரை ஆயுதம் கொண்டு தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றத்திற்காக 60, 66 வயதுகளுடைய இரு ஆடவர்களைக் கைது செய்துள்ளதாக போலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
யுங் ஷெங் சாலை, புளோக் 101ல் அமைந்துள்ள அந்தக் காப்பிக் கடையில் வழக்கமாக ஒன்றாகச் சாப்பிட வரும் நால்வருக்கு மத்தியில் சண்டை மூண்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு போலிஸ் சென்றபோது கைகலப்பில் இறங்கியிருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டனர். காயமடைந்த 52 வயது ஆடவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.