ரயில் தண்டவாளக் கோளாறினால் இன்று காலை கிழக்கு மேற்கு பெருவிரைவு ரயில் சேவை தடைப்பட்டது.
ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையத்திற்கும் குவீன்ஸ்டவுன் ரயில் நிலையத்திற்கும் இடையிலான பயண நேரம் 30 நிமிடங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை 7 மணிக்கு முன்பாக எச்சரிக்கை அளித்தது.
காலை 7 மணிக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களுக்கு இடையில் இலவசப் பேருந்து சேவைகள் பயணிகளுக்கு உதவின.
கிளமென்டி ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் கோளாறு ஏற்பட்டதால் கிழக்கு மேற்கு ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டிருப்பதாகக் காலை 5.45 மணி அளவில் 'எஸ்எம்ஆர்டி' நிறுவனம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
காலை 8.30 மணி அளவில், ரயில் சேவை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களின் வழியே செயல்பட்ட இலவசப் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.