உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் 2,000க்கும் அதிகமான சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்துள்ளது.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கொண்ட 2,016 பெட்டிகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக ஆணையம் செவ்வாய்க்கிழமை (19 மார்ச்) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. சிங்கப்பூரை நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றில் தண்ணீர் போத்தல்கள் என குறிப்பிடப்பட்ட சில பொருட்களுக்கு இடையே இந்தப் பெட்டிகள் பதுக்கப்பட்டிருந்தன. அந்த லாரி மலேசியாவில் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிய வந்தது.
மின்வருடிகளில் பதிவான அந்தச் சரக்கு லாரியின் பொருட்களைக் காட்டும் படங்களில் அசாதாரணமான அம்சங்கள் தென்பட்டதை அடுத்து அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து, லாரியின் 45 வயது மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை சிங்கப்பூர் சுங்கத் துறை தொடர்ந்து விசாரிப்பதாக ஆணையம் கூறியது.

