சாங்கி விமான நிலைய குழுமத்தின் தலைவர் லியூ முன் லியோங்கிடம் வேலை பார்த்த பணிப்பெண், அவரிடமிருந்து 34,000 வெள்ளிக்கு அதிகமதிப்புள்ள பொருட்களைக் களவாடியதாக நீதிமன்றத்தில் புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
10,000 வெள்ளி ஜெரால்ட் ஜெண்டா கைக்கடிகாரம், தலா 150 வெள்ளி மதிப்புள்ள 115 ஆடைகள், 2,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புடைய துணைக்கருவிகளுடன் சேர்ந்த இரண்டு ஐ-போன்கள் உள்ளிட்ட பொருட்களை அவர் திருடினார்.
நான்கு திருட்டுக் குற்றங்களை 45 வயது இந்தோனீசியரான பார்ட்டி லியானி செய்திருப்பதாக மாவட்ட நீதிபதி, இருபது நாட்கள் நீடித்த நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு உறுதி செய்தார்.
ஈசிலிங் அட்டைகள், பணப்பைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் திருட்டுத்தனமாகத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு ஒன்றும் அந்தப் பணிப்பெண் மீது உள்ளது. அதனை நீதிமன்றம் பிறகு விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்ட்டி தற்போது 10,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மனிதநேய அமைப்பு ஒன்றின் தங்குமிடத்தில் அவர் தற்போது தங்கியுள்ளார். மார்ச் 25ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும். ஒவ்வொரு திருட்டுக் குற்றத்திற்கும் அவருக்கு ஏழு ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.