இரண்டு மூன்று பேர் படுக்க வேண்டிய அறைகளில் 24 பேர் வாடகைக்குத் தங்கியுள்ளனர். பாண்டான் கார்டன்ஸ் புளோக் 403லுள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடு ஒன்றில் இவ்வாறு நிகழ்வதாக 'ஷின் மின்' நாளிதழ் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை, வீவக அனுமதிக்கும் குடியிருப்பாளர் எண்ணிக்கையைவிட நான்கு மடங்கிற்கு மேல் உள்ளது.
இந்த வீட்டிலுள்ள மூன்று அறைகளில் குறைந்தது ஆறு பேர் தங்கியுள்ளனர். அவற்றிலுள்ள ஓர் அறையில் எட்டு பேர் தங்கியுள்ளனர். வெளிநாட்டினரான இவர்களுக்கு வேலையைப் பெற்றுத் தந்த முகவர்கள் இந்த ஏற்பாட்டை அறிமுகம் செய்தனர்.
சட்டவிரோதமான உள்வாடகை நடவடிக்கை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்துவருவதாக 'ஷின் மின்' தெரிவித்துள்ளது.
வீடுகளையோ அல்லது வீட்டு அறைகளையோ வாடகைக்கு விடுவதற்கு முன்னர் வீட்டு உரிமையாளர்கள், வீவகவிடம் உரிய அனுமதியைப் பெறவேண்டும். மேலும், மூன்று அறை வீடுகளில் அதிகபட்சமாக ஆறு பேரே தங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதைவிட சிறிய வீடுகளில் நான்கு பேர் வரை தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த விதிமுறைகளை மீறும் வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன், அவர்களது வீடு பறிமுதல் செய்யப்படலாம்.