கருணையுடன் லாரியைத் திருப்பிக் கொடுக்க மனு: பலரும் ஆதரவு

கருணையுடன் லாரியைத் திருப்பிக் கொடுக்க மனு: பலரும் ஆதரவு

1 mins read

பாசிர் ரிஸ் பகுதியில் சென்ற ஆண்டு டிசம்பரில் சைக்கிளோட்டி ஒருவர் சம்பந்தப்பட்ட விபத்தில் தொடர்புடைய லாரியைத் திருப்பி கொடுத்து உதவும்படி கேட்டு இணையம் வழி விடுக்கப்பட்டு உள்ள மனுவுக்கு நான்கு நாளில் ஏறக்குறைய 1,500 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். டியோ செங் தியோங், 58, என்பவருக்குச் சொந்தமான லாரியைக் கருணையுடன் அவரிடத்தில் ஒப்படைத்துவிடும்படி Change.org என்ற இணையத்தளத்தில் அந்த வேண்டுகோள் மனு இடம்பெற்று இருக்கிறது. அலட்சியமாக வாகனத்தை ஓட்டியதாக டியோ மீது முதலில் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு மூர்க்கமாக வாகனம் ஓட்டியதாகக் கூறும் குற்றச்சாட்டாகத் திருத்தப்பட்டது. அவருடைய லாரியை போக்குவரத்து போலிஸ் முடக்கி வைத்து இருக்கிறது. லாரியை வைத்துதான் டியோ பிழைப்பு நடத்துகிறார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.