சீக்கிய கோயில் ஒன்று அருகே ஐம்பது பேருடன் கலவரத்தில் ஈடுபட்ட இந்தியர் ஒருவருக்கு ஐந்தரை ஆண்டு சிறைத்தண்டனையுடன் 12 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. ஜாலான் புக்கிட் மேராவில் ஏப்ரல் 2017ல் இந்தக் கலவரம் ஏற்பட்டது. 26 வயது யத்விந்தர் சிங்கும் கலவரத்தில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டினரும் சொந்தமாகத் தயாரித்த ஆயுதங்களுடன் கோயில் சுற்றுவட்டாரத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற முயன்றபோது உரிய பயண பத்திரங்களை அதிகாரிகளிடம் காண்பிக்கத் தவறியதையும் மற்றொரு சம்பவத்தில் மிரட்டி பணம் வாங்கியதையும் அவர் வியாழக்கிழமை (மார்ச் 21) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். கடந்தாண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டபோது சிங் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் பேருந்து ஒன்றின் சரக்குப் பகுதியில் ஒளிந்துகொண்டு சிங்கப்பூரைவிட்டு மலேசியாவுக்குச் செல்ல முயன்றார்.
சீக்கிய கோயிலில் பிற்பகல் ஒரு மணி அளவில் இந்தப் பூசல் மூண்டது. சிங்கின் கும்பலைச் சேர்ந்தவர்கள் சிலருக்கும் வேறு சில பக்தர்களுக்கும் இடையே கோயிலுக்கு வெளியில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உருட்டுக் கட்டைகள், பலகைகள் வார்ப்பட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பும் சிங், சட்டத்தை மீறியுள்ளார்.
2016ஆம் ஆண்டில் கலவரக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் சிங்கிற்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜனவரி 2017ல் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர், தடை உத்தரவு ஒன்றை மீறியதால் கூடுதலாக 129 நாட்கள் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. தடை உத்தரவின்படி 2017ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதிக்கும் ஜூலை 2ஆம் தேதிக்கும் இடையே அவர் எந்தக் குற்றங்களையும் செய்யக்கூடாது. ஆனால் சிங்கும் அவரது கும்பலும், இந்தியாவைச் சேர்ந்த 21 வயது குமாரி பிரார் சிமதீப் கோரிடமிருந்து 1,500 வெள்ளி பணத்தை மிரட்டி வாங்க முயன்றனர்.
இந்த வழக்கில் சிங் அரசுத்தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாக இருக்க வேண்டியிருந்ததால் அவர் சிங்கப்பூரிலிருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பப்படவில்லை. பேருந்தின் சரக்குப் பகுதியில் ஏறி அவர் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகள் அவரைப் பிடித்து கைது செய்தனர்.
கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். பணத்தை மிரட்டி வாங்க முயன்ற குற்றத்திற்காக அவருக்கு பிரம்படிகளுடன் ஏழாண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.