சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட ஸ்கூட் விமானம், தைப்பேயில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது விமானத்தின் உட்பகுதியில் வழக்கத்திற்கு மாறான காற்றழுத்தம் (abnormal cabin pressure) ஏற்பட்டதால் அனைவரும் பிராணவாயு கவசங்களை அணிய வேண்டியிருந்தது.
அப்போது விமானத்திற்குள் இருந்த ஒரு குழந்தை பலமுறை வாந்தி எடுத்ததாக அதன் தாயார் கூறியதாக ஸ்கூட் நிறுவனத்தின் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார். இதனைத் தவிர வேறு யாருக்கும் காயங்களோ வேறு வித உபாதைகளோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.
TR996 விமானத்தில் அப்போது 180 பயணிகள் இருந்ததாகவும் தைப்பேயின் தௌயான் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி 1.15 மணிக்கு அவர்கள் அனைவரும் விமானத்தைவிட்டு பாதுகாப்பாக வெளியேறியதாகவும் ஸ்கூட் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தால் தைப்பேயிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட TR997 சேவையின் பயணிகளும் தாமதமடைந்தனர்.
விசாரணைகளுக்காக அந்த விமானத்தின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.