போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தனது படுக்கையைவிட்டு எழுந்து கழிவறைக்குச் சென்றபோது அங்கு தடுக்கி விழுந்து இடது கரத்தை முறித்துக்கொண்டதாக ஞாயிற்றுக்கிழமை காலை தெரிவித்தார்.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு கோ, ஆக அண்மையில் அடித்தள நிகழ்ச்சி ஒன்றின்போது இது குறித்து மனம் திறந்து பேசினார். இந்த விபத்து கிட்டத்தட்ட நள்ளிரவில் நிகழ்ந்ததாக 66 வயது திரு கோ கூறினார். அவர் இன்னமும் மருத்துவ விடுப்பில் உள்ளார்.
"இதுவரையில் நான் இவ்வளவு வலியை அனுபவித்ததில்லை," என்றார் திரு கோ. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு அங்கு தங்கியிருந்தார். முறிந்த இடது கரத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 'டைட்டேனியம்' உலோகத் தகட்டுடன் மருத்துவர்கள் அவரது கரத்தைச் சரிசெய்ததாகத் திரு கோ கூறினார்.
தனது அனுபவத்திலிருந்து மக்கள் கற்றுக்கொள்ளவேண்டும் என்று திரு கோ தெரிவித்தார். கழிவறைகளிலும் சமையலறைகளிலும் முதியவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
65 வயது சிங்கப்பூரர்களில் மூவரில் ஒருவர் இத்தகைய சம்பவங்களால் அவதிப்படுவதாகத் திரு கோ மருத்துவமனையில் இருந்தபோது அறிந்ததாகத் தெரிவித்தார்.
"இது மிக அதிகம். பாதிக்கப்பட்ட உங்களுக்கும் உங்களது குடும்பத்தாருக்கும் அரசாங்கத்திற்கும் இது வருத்தத்திற்குரியது. ஏனெனில் மருத்துவமனையில் நீங்கள் இரண்டு வாரத்திற்குத் தங்கினால் அதற்கு நிறைய கட்டணக்கழிவுகள் தேவைப்படும்...முடிந்தவரை இவ்வாறு விழாமல் இருப்பதே நல்லது," என்றார் அவர்.