சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு நன்றாக இருப்பதாகவும் முன்னேறி வருவதாகவும் துணைப்பிரதமர் தர்மன் தெரிவித்திருக்கிறார். இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையே சந்திப்புகள் தொடர்ந்து நடந்து வருவதாகத் திரு தர்மன், சீனத் துணைப்பிரதமர் சன் சுன்லானுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். பிரதமர் லீ சியன் லூங், துணைப்பிரதமர் டியோ சீ ஹியன் ஆகியோர் ஏப்ரலில் சீனா செல்வர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து நாள் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ள திரு தர்மன், 'ஃபோர்பிடன் சிட்டி' அரண்மனையிலுள்ள ஊதா ஒளி மண்டபத்தில் திருவாட்டி சன்னைச் சந்தித்துப் பேசினார்.
சிங்கப்பூரும் சீனாவும் அருகருகே உள்ள நட்பு நாடுகள் என்றும் முக்கிய பங்காளிகள் என்றும் திருவாட்டி சன் தெரிவித்தார். திரு தர்மனும் சீனாவின் நல்ல நண்பராக இருக்கிறார் என்று அவர் கூறினார். பொதுமக்களின் நல்லாதரவாலும் அடிக்கடி நிகழும் உச்சநிலை சந்திப்புகளாலும் இருநாட்டு உறவு வலிமை பெறுவதாகத் திருவாட்டி சன் சொன்னார்.
சீனத் தலைநகர் பெய்ஜிங்கைவிட்டு திரு தர்மன் வரும் வியாழக்கிழமை காலை சிங்கப்பூருக்குப் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடாந்திர சீன மேம்பாட்டு கருத்தரங்கில் திரு தர்மன் சீனத் தலைவர்கள், கல்விமான்கள், வர்த்தகத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் உரையாற்றினார். சீனாவின் மக்கள் வங்கியின் ஆளுநர் யீ காங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் அவர் சந்தித்தார்.