'பிசிஎஃப் ஸ்பார்கல்டாட்ஸ்' பாலர் பள்ளிகள் நான்கில் இரைப்பை குடல் அழற்சி சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து அங்கு உணவு விநியோகம் செய்த 'கேட்ஸ் கேட்டரிங்' நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நோய்ப் பரவலால் குறைந்தது 109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அண்மை மாதங்களில் மூன்றாவது முறையாகப் பாலர் பள்ளிகளில் இரைப்பை குடல் அழற்சி பரவல் நிகழ்ந்திருக்கிறது. பிசிஎஃப் தோ பாயோ கிளையில் பிப்ரவரி 1ஆம் தேதி இதுபோன்ற ஒரு சம்பவத்தில் 14 பிள்ளைகளுக்கு வாந்தியும் பேதியும் ஏற்பட்டன. பிப்ரவரி 26ஆம் தேதி, தங்ளின் 'மைண்ட்சேம்ப்ஸ்' ஆரம்பப்பள்ளியில் 31 பேருக்கு இரைப்பை குடல் அழற்சி தொற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தை விசாரிப்பதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம், தேசிய சுற்றுப்புற அமைப்பு, சுகாதார அமைச்சு ஆகியவை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் புதன்கிழமை காலை தெரிவித்தன. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 15 பேரில் அறுவர் வீடு திரும்பியுள்ளனர்.
நோய்த்தொற்று குறித்து அதிகாரிகளிடம் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. உணவு நிறுவனத்தின் சமையலறையை அதிகாரிகள் அதே நாளில் சோதனையிட்டனர். திங்கட்கிழமையிலும் புதிய சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, 'கேட்ஸ் கேட்டரிங்' நிறுவனத்திடம் அதன் செயல்பாடுகளை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
விசாரணைக்காக உணவு மற்றும் சுற்றுப்புற மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.