சிங்கப்பூரின் பொங்கோல் வட்டாரத்திற்கு அருகிலுள்ள வடக்குக் கரைப்பகுதியின் வழியாக இந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் இருவரைக் கடற்காவல் படையினர் கைது செய்துள்ளனர்.
படகு கரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது 20 வயது பங்ளாதேஷி ஒருவர் கடலுக்குள் குதித்து கரையை நோக்கி நீந்திக்கொண்டிருந்தார். மோட்டார் படகின் ஓட்டுநரான 46 வயது மலேசியர், தனது படகை மலேசியாவுக்குத் திருப்ப முயன்றார். ஆனால் இந்த இருவரையும் போலிஸ் கடற்காவல் படையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.
அதிகாரிகளைக் கண்டபோதும் படகை நிறுத்தாமல் படகோட்டி அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவர் தனது படகை வேகமாக செலுத்தியபோதும் அதிகாரிகள் அவரைப் பின்தொடர்ந்து இறுதியாக அவரது படகைக் கவிழ்த்தனர்.
திங்கட்கிழமை (மார்ச் 25) இரவு சுமார் 7.40 மணிக்கு இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூருக்குள் கள்ளத்தனமாக நுழைந்ததன் பேரில் இவர்கள் இருவரும் இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.
இந்தக் குற்றத்திற்காக ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையுடன் மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.