யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனத்தின் புலனாகா கலாசார மரபுடைமை பிரதிநிதிப் பட்டியலில் உணவங்காடி கலாசாரத்தை இணைக்கும் நியமனத்தை சிங்கப்பூர் நேற்று சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பரிந்துரைக்குச் சமூகம் ஆதரவளிப்பதைப் பிரதிபலிக்கும் கடிதங்கள், புகைப்படங்கள், காணொளிகள் ஆகியன நியமனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
உணவங்காடி நிலையத்தில் பிரியாணி சமைக்கும் இந்திய முஸ்லிம் ஆடவர், 'சிக்கன் ரைஸ்' சமைக்கும் சீன உணவங்காடி கடைக்காரர், 'சென்டோல்' உட்கொள்ளும் தந்தையும் பிள்ளைகளும் அந்தப் புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரத்தைப் பற்றி 12 பேர் கொண்ட 'யுனெஸ்கோ' நீதிபதிக் குழு மேலும் புரிந்துகொள்ளும் நோக்கில் 10 நிமிட காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.
நியமனப் படிவங்களை ஜூலை மாதம் முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். தேசிய மரபுடைமை கழகம், தேசிய சுற்றுப்புற வாரியம், வர்த்தகர்கள் சங்க சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நியமனத்தைச் சமர்ப்பித்துள்ளன.
அடுத்த ஆண்டு இறுதியில் இந்த நியமனத்தின் முடிவுகள் வெளிவரும்.
நியமனம் வெற்றிபெற்றால், பல்வேறு நாடுகளிலுள்ள இதர 429 கலாசாரங்களின் பட்டியலில் சிங்கப்பூரின் உணவங்காடி கலாசாரமும் இணையும்.