போக்குவரத்து அபராதம் கட்டவேண்டிய வெளிநாட்டு வாகனமோட்டிகள் வரும் திங்கட்கிழமைக்குள் அதனைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிங்கப்பூரின் அரசாங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் போலிஸ் படை, நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை இந்த அறிவிப்பை இணைந்து வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பு முன்னதாக பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
அபராதம் கட்டிய வாகனமோட்டிகள் அதனை நிரூபிக்கும் ரசீதுகளை சிங்கப்பூருக்குள் நுழையும்போது வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வாகனமோட்டிகள் www.axs.com.sg என்ற இணையத்தளத்திற்குச் சென்று, தாங்கள் அபராதம் கட்டவேண்டுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். AXS இயந்திரங்கள் அல்லது செயலி வாயிலாக அவர்கள் அபராதங்களைக் கட்டலாம்.

