டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியூஷ் குப்தாவுக்கு 15.5 விழுக்காடு ஊதிய உயர்வு கிடைத்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அவரது சம்பளம் 11.9 மில்லியன் வெள்ளிக்கு அதிகரித்துள்ளதாக வங்கியின் ஆக அண்மைய வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு குப்தாவின் ரொக்க போனஸ் 4.5 மில்லியன் வெள்ளியாகவும் பங்குத் திட்டம் 6.1 மில்லியன் வெள்ளியாகவும் அதிகரித்துள்ளன.
2017ஆம் ஆண்டில் திரு குப்தா 10.3 மில்லியன் வெள்ளியைச் சம்பாதித்தார். இது அவரது 2016ஆம் ஆண்டுக்கான சம்பளத்தைக் காட்டிலும் 23 விழுக்காடு அதிகம். 2017ஆம் ஆண்டில் நிதி நிர்வாக வருவாய் நான்கு மடங்கு அதிகரித்தது. ஆனால் 2016ஆம் ஆண்டில் டிபிஎஸ்ஸின் வருவாய் குறைந்ததால் அந்த ஆண்டுக்கான அவரது சம்பளம், அதற்கு முந்தைய ஆண்டின் சம்பளத்தைக் காட்டிலும் 23 விழுக்காடு குறைந்தது.
டிபிஎஸ்ஸின் மொத்த வருவாய் 2018ஆம் ஆண்டில் 13.2 பில்லியன் வெள்ளிக்கு உயர்ந்தது. அதன் நிகர லாபம் 28 விழுக்காடு அதிகரித்து 5.63 பில்லியன் வெள்ளியானது.