போக்குவரத்து அபராதம் கட்டவேண்டிய வெளிநாட்டு வாகனமோட்டிகளைக் கண்டுபிடித்து அவர்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை ஜோகூர் பாலத்திலும் துவாஸ் சோதனைச் சாவடியிலும் திங்கட்கிழமை ( ஏப்ரல் 1) முதல் தொடங்கியது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
சிங்கப்பூருக்குள் வேலைக்காக ஜோகூர் பாலம் வழியாகவும் இரண்டாவது இணைப்பு வழியாகவும் நுழையும் மலேசியர்கள் பலர் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.
பிப்ரவரியில் வெளிவந்த ஆக அண்மைய விவரங்களின்படி, வெளிநாட்டு வாகனமோட்டிகள் மொத்தம் 32 மில்லியன் வெள்ளி பெறுமானமுள்ள கிட்டத்தட்ட 400,000 அபராதங்களைக் கட்டவேண்டியுள்ளனர். அவர்கள் தங்களது அபராதத்தைக் கட்டுமாறு சிங்கப்பூர் அதிகாரிகள் கடந்த வாரம் மீண்டும் நினைவுபடுத்தினர். அபராதம் கட்டாவிட்டால் வாகனமோட்டிகள் சிங்கப்பூருக்குள் நுழைய தடை செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தங்களுக்கு ஏதேனும் அபராதம் எஞ்சியுள்ளனவா என்பதைச் சரிபார்க்க வாகனமோட்டிகள் www.axs.com.sg. என்ற இணையத்தளத்தை நாடலாம்.