மார்ச் மாதத்தில் 71 வயது மூதாட்டி ஒருவர் டெங்கி நோயால் உயிர் இழந்தார். டெங்கியால் இவ்வாண்டு நேர்ந்த மரணங்களின் எண்ணிக்கை இதனுடன் மூன்றாக உயர்ந்துள்ளது.
சம்பந்தப்பட்ட மூதாட்டி அங் மோ கியோ அவென்யூ 4ல் வசித்து வந்தார். அந்தப் பகுதி டெங்கி அதிகமாகப் பரவும் இடமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த மூதாட்டி மார் 23ஆம் தேதி இறந்ததாகச் சுகாதார அமைச்சின் பேச்சாளர் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) தெரிவித்தார்.
பிப்ரவரி மாதம் 74 வயதும் 77 வயதும் உடைய இரண்டு ஆடவர்கள் டெங்கிக் காய்ச்சலால் மாண்டதாகத் தகவல் வெளிவந்தது. ஒருவர் பிடோக்கிலும் மற்றொருவர் ஹவ்காங்கிலும் வசித்திருந்தனர்.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் அண்மை புள்ளிவிவரங்களின்படி, டெங்கிக் காய்ச்சலால் இவ்வாண்டு குறைந்தது 2,224 பேர் பாதிக்கப்பட்டனர்.
திங்கட்கிழமை கிடைத்த ஆக அண்மை நிலவரப்படி, டெங்கி அதிகமாகப் பரவும் இடங்களின் எண்ணிக்கை 26ல் இருப்பதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

