மக்கள் செயல் கட்சியின் சமூக அறநிறுவனம் (பிசிஎஃப்) தனது பாலர் பள்ளிகளில் உணவு விநியோகச் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. 'பிசிஎஃப்' நடத்தும் பாலர் பள்ளிகள் சிலவற்றில் நச்சுணவு சம்பவங்கள் அண்மையில் நிகழ்ந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சமையல்காரர்களை வேலையில் அமர்த்த முடிவு செய்திருப்பதாகவும் அந்த வேலைக்குத் தகுதியானவர்களைத் தேடி வருவதாகவும் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்டர் பே தெரிவித்தார். தேசிய சுற்றுப்புற வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உணவு சுகாதார வகுப்புகளை முடித்துள்ள மேலும் சில பணியாளர்கள் சமையல் அறையில் பணியாற்ற அமர்த்தப்படுவர்.
நச்சுணவு சம்பவங்கள் முதன்முதலாக மார்ச் 21 ஏற்பட்டன. 13 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 239 பிள்ளைகளும் 12 பணியாளர்களும் பாதிப்படைந்ததாகத் தகவல் வெளிவந்தது.