சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் 2012ஆம் ஆண்டிலிருந்து 'கேன்டிடா ஒரிஸ்' (சி.ஒரிஸ்) உயிர்க்கொல்லிக் கிருமியால் பாதிக்கப்பட்ட 11 பேர் சிகிச்சை பெற்றதாகச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மருந்து எதிர்ப்புத் தன்மையுடைய ஒருவகை பூஞ்சையான இந்தக் கிருமி தொற்றிய நோயாளிகளில் இருவர் உயிரிழந்தனர். எஞ்சிய ஒன்பது பேர் குணமடைந்தனர். மரணம் அடைந்த இருவரில் ஒருவர் உட்பட, மூன்று நோயாளிகள் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் 2012ஆம் ஆண்டுக்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடையில் சிகிச்சை பெற்றனர்.
"நோயாளிகள் உடனே தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் தொடர்பு கொண்ட நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டனர். பூஞ்சையை அகற்றுவதற்காக நோயாளிகளின் அறைகளில் மருந்தடிக்கப்பட்டது," என்று சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சி.ஒரிஸ் நோய்ப்பரவலைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தகுந்த வழிமுறைகளை இங்குள்ள சுகாதார அமைப்புகள் கையாள்வதாகப் பேச்சாளர் கூறினார்.