ஈசூனில் கடந்த நவம்பர் வாணங்களைச் சட்டவிரோதமாக வெடிக்கச் செய்த ஆடவர் போலிசாரிடம் பொய்யுரைத்ததுடன் விசாரணையின்போது மற்றொருவரை இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்த முயன்றார். ஜீவன் அர்ஜுன் என்ற அந்த ஆடவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாணங்களை சட்டவிரோதமாக வெடிக்கச் செய்ததற்காகவும் போலிசாருக்குப் பொய்யான தகவலைக் கொடுத்ததற்காகவும் அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு நவம்பரில் தீபாவளிச் சந்தைக்குச் சென்றிருந்த 29 வயது ரசாயன ஆய்வாளர் ஜீவன் , அடையாளம் தெரியாத விற்பனையாளர் ஒருவரிடம் வாணங்களை வாங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
வாணங்களை வாங்கியபின் ஜீவன், புளோக் 513ஏ ஈசூன் ஸ்திரீட் 51க்கு அருகிலுள்ள விளையாட்டுக் கூடத்தில் காத்திருந்த தனது குடும்பத்தாரையும் நண்பர்களையும் சந்தித்தார். நவம்பர் 6ஆம் தேதி அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ஜீவன் அவர்கள் அனைவரையும் அருகில் இருந்த ஒரு திடலுக்கு அழைத்து வாணங்களை வெடிக்கச் செய்தார்.
சாட்சியங்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, வாண வேடிக்கை வெடிக்கும் சத்தத்தைச் சுற்றியிருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளில் இருந்தவர்களால் கேட்க முடிந்ததாக அரசாங்க வழக்கறிஞர் ஜீன் கோ தெரிவித்தார். அந்த வாணவேடிக்கை கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீடித்தது.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை; எந்தப் பொருட்சேதமும் உண்டாகவில்லை. வாணவேடிக்கையைப் பற்றி குடியிருப்பாளர் ஒருவர் போலிசாரிடம் தகவல் கொடுத்த மறுநாள் ஜீவனை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கினர்.
வாணங்களைத் தருவித்தது 32 வயது மாதவன் மைக்கில் டக்ளஸ் என்று ஜீவன் போலிஸ் அதிகாரிகளிடம் பொய்யுரைத்தார். வாணங்களை வெடிக்கச் செய்தது ஜீவன்தான் என்ற தகவலை மாதவன் போலிசாரிடம் கூறியதால் ஜீவன் அவர் மீது ஆத்திரமடைந்து அவ்வாறு பொய்யுரைத்ததாக வழக்கறிஞர் கோ தெரிவத்தார்.
வாணங்களை வெடிக்கச் செய்வதால் கடுமையான காயங்களும் தீச்சம்பவங்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட நீதிபதி மார்வின் பே கூறினார்.