மலேசியாவின் 'ஃபையர்பிலை' பயணி விமானம் சிலேத்தார் விமான நிலையத்தில் வியாழக்கிழமை காலை தரையிறங்கி பரிசோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
சுமார் ஒரு மணி நேரம் தரையில் இருந்த பின்னர் அந்த விமானம் பிற்பகல் 12.30 மணிக்குப் பறக்க ஆரம்பித்தது.
சிலேத்தார் விமான நிலையத்தில் 'ஃபையர்பிலை' நிறுவனம் தொடங்கப்போகும் தனது சேவைக்கு முன்னதாக இந்தப் பரிசோதனை ஓட்டத்தை நடத்தியதாக சிங்கப்பூர் சிவில் விமானத் துறை ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
"ஃபையர்பிலையின் விருப்பத்தின்படி ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் மேலும் சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து வழிநடத்தும்," என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.
சிலேத்தார் விமான நிலையத்தில் பயண சேவைகள் ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் திங்கட்கிழமை அறிவித்தார்.