ஒருவரின் விழித்திரைப்படலத்தையும் முகத்தையும் கொண்டு அவரது அடையாளத்தை உறுதி செய்யும் தானியக்க முறை தற்போது துவாஸ் சோதனைச் சாவடியில் சோதிக்கப்பட்டு வருகிறது.
சோதனை வெற்றிகரமாக அமைந்தால், கடப்பிதழ்களையும் விரல் ரேகைகளையும் வருடும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் தற்போதைய முறை கடந்த காலமாகிவிடும். தொட்டுணர்வு இல்லாத இந்தப் புதிய குடிநுழைவு சோதனை முறை நடப்புக்கு வந்தால், தேய்ந்த விரல் ரேகைகளைக் கொண்டுள்ள பயணிகளுக்குத் தொல்லை இருக்காது.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நடத்திவரும் இந்த ஆறு மாதகாலச் சோதனை திங்கட்கிழமை (15 ஏப்ரல்) தொடங்கியது. சோதனைச் சாவடியிலுள்ள குடிநுழைவு மண்டபத்தின் தானியக்கத் தடத்தில் புதிய சோதனை முறை பயன்படுத்தப்பட்டது.
புதிய முறை சீராகவும் துல்லியமாகவும் செயல்படுகிறதா என்பதை உறுதி செய்வதுடன், மக்கள் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்வதற்காகும் நேரமும் சோதனையின்போது கணக்கிடப்படும். சோதனைச் சாவடி ஆணையத்தின் செயலாக்கப் பிரிவின் தலைவரான 41 வயது சூப்பரின்டெண்டன்ட் டெர்ரிக் சூங் இந்தத் தகவலை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
கடப்பிதழ்களைக் காட்டவேண்டிய தேவை இந்த முறையில் இல்லாததால் சோதனை முறை நிச்சயம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் பயணிகளுக்குச் சௌகரியத்தைத் தரும் என்றும் திரு சூங் கூறினார்.
சோதனை வெற்றி அடைந்தால் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் மற்ற சோதனைச் சாவடிகளில் இந்த முறையைச் செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.