கொரிய உணவு விற்கும் உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கும் பணியாளர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டதை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புக்கிட் பாஞ்சாங்கின் ஹில்லியன் கடைத்தொகுதியிலுள்ள 'ஹா-ஜூன்' கொரிய உணவகத்தில் அந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் நடந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
கைகலப்பில் காயமடைந்த வாடிக்கையாளர் சுயநினைவுடன் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த 34 வயது ஆடவரிடம் உணவக பணியாளர் புண்படும்படி பேசியதை அடுத்து இருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டதாக ஆடவருடன் இருந்த ஐரின் என்ற பெண் கூறியதாக 'ஸ்டோம்ப்' செய்தித்தளம் குறிப்பிட்டது. இதனை மறுத்த உணவக நிர்வாகி குமாரி ஸு, முதலில் முறைதவறி நடந்தது வாடிக்கையாளர்தான் என்று கூறினார்.
பின்னர் போலிசார், சண்டையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
உணவகத்தின் தரையில் ரத்தம் சிந்தியிருந்ததைக் காட்டும் வாடிக்கையாளரின் ஒரு கண்ணுக்கு மேல் ஆழமான வெட்டுக்காயம் இருப்பதையும் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.