நீல வண்ண மறுபயனீட்டுக்கான குப்பைத்தொட்டிகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்க, தொட்டிகளின் மீது ஒட்டப்படும் அடையாளச் சீட்டின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என சுற்றுப்புற, நீர்வள அமைச்சு நடத்திய ஆய்வில் பங்கேற்றவர்களில் 70 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 7 முதல் 31ஆம் தேதிவரை இணையம் வழியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 1,300 பேர் கலந்துகொண்டனர். தற்போதைய நிலவரப்படி, சிங்கப்பூரில் நீல வண்ண மறுபயனீடு குப்பைத் தொட்டிகளில் போடப்படும் பொருட்களில் 40% மறுபயனீடு செய்யமுடியாத நிலையில் உள்ளன. 'ஸீரோ கழிவு பெருந்திட்டத்'தின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பொது ஆய்வு கழிவுகளைக் குறைத்து, மறுபயனீட்டை ஊக்குவிப்பது பற்றி ஆராய்ந்தது.
இந்தப் பெருந்திட்டம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட உள்ளது. மேற்கண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 65 விழுக்காட்டினர் பட்டதாரிகள். 85 விழுக்காட்டினர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். இதன் தொடர்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, "இந்த ஆய்வைத் தவிர, கழிவுகளைத் திறம்பட நிர்வகிப்பதன் தொடர்பில் பொதுமக்களுடன் இரண்டு கலந்துரையாடல்கள் நடத்தப்படும்," என்றார். பலதரப்பினரை ஒன்றுசேர்த்து கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் கழிவுகளற்ற நாடாக சிங்கப்பூரை ஆக்குவதன் தொடர்பில் அவர்களது பலவிதமான கருத்துகளை அறிந்துகொள்ள முடியும் என்று சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் கூறினார். சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளில் கழிவுகளின் அளவு ஏழு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.