ஹவ்காங் வட்டாரத்தில் திங்கட்கிழமை நடந்த வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.
இயோ சூ காங்கை நோக்கிச் செல்லும் ஹவ்காங் அவென்யூ 9ல் நடந்த இந்த விபத்து குறித்து பிற்பகல் சுமார் ஒரு மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 16 வயது பாதசாரி சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
26 வயது மோட்டார் சைக்கிளோட்டியும் சுயநினைவுடன் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் காயங்களால் பின்னர் உயிர் இழந்தார்.
சம்பவத்தின்போது 16 வயது இளையர் சாலையைக் கடந்துகொண்டிருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. ஆனால் அவர் சாலையை முறைதவறி கடந்து சென்றாரா என்பது தெளிவாக இல்லை.
சம்பவத்தை விசாரித்து வருவதாக போலிசார் தெரிவித்தனர்.

