மின்சார கார் பகிர்வு நிறுவனமான 'புளூஎஸ்ஜி'யின் 99 மின்னூட்டு இடங்களைப் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி முதல் பயன்படுத்தத் தொடங்கலாம். 'புளூஎஸ்ஜி' இங்கு செயல்பட்டு 18 மாதங்கள் ஆன பின்னர் அந்நிறுவனம் இதனை அறிவித்தது.
'புளூஎஸ்ஜி' கட்டமைப்பில் மொத்தம் 191 நிலையங்களும் 755 மின்னூட்டுச் சாதனங்களும் உள்ளன. 2020ஆம் ஆண்டுக்குள் 400 மின்னூட்டச் சாதனங்களைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விடப்போவதாக அந்நிறுவனம் முன்னர் அறிவித்திருந்தது.
இந்தச் சேவையைப் பயன்படுத்த விரும்பும் தனியார் வாகன உரிமையாளர்கள் 'புளூஎஸ்ஜி'யின் இணையத்தளம் அல்லது செயலி வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சேவையின் வர்த்தக வரி முதல் மூன்று மணி நேரத்திற்கு மணிக்கு ஒரு வெள்ளியாக உள்ளது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகான கட்டணம் மணிக்கு இரண்டு வெள்ளியாக உள்ளது. வருடாந்திர உறுப்பியத் தொகை 20 வெள்ளி.
'புளூஎஸ்ஜி' இணையத்தளம் மற்றும் செயலி வழியாக மின்னூட்டுச் சாதனங்களைப் பயன்படுத்த 45 நிமிடங்கள் வரை முன்னதாக விண்ணப்பிக்கலாம்.
'புளூஎஸ்ஜி' நிறுவனம் 450 மின்சார கார்களையும் 30,000 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. டிசம்பர் 2017ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனத்தின் கார்கள் 200,000 முறைக்கு மேல் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.