பெரும்பாலான இளம், புதிய ஓட்டுநர்கள் அதிக விலையில் காப்புறுதிச் சந்தா செலுத்தி வருகின்றனர். சிங்கப்பூர் வாகனச் சங்கம் குறைந்த சந்தா கட்டும் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு நிபந்தனைகள் உண்டு.
சாலைப் பாதுகாப்பு தொடர்பில் இளம், அனுபவமற்ற ஓட்டுநர்கள் நான்கு மணிநேரத்திற்கான வாகனமோட்டும் திட்டம் ஒன்றில் கட்டாயமாகக் கலந்துகொள்ள வேண்டும். நேற்று தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டப்படி ஓட்டுநர்கள் ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஓட்டுநரின் அனைத்து வாகனமோட்டும் நடவடிக்கைகளையும் இச்செயலி கண்காணிக்கும். ஓட்டுநர் எவ்வாறு தம்மை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதை இது காட்டும். அத்துடன் ஓட்டுநர்களுக்குத் தரப்படும் மதிப்பெண்கள், தரவரிசை ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற ஓட்டுநர்களுடன் ஒப்பிட்டும் பார்க்கலாம். 24 வயதுக்குக் கீழுள்ள ஓட்டுநர்கள் அல்லது ஈராண்டுக்கும் குறைவான வாகனம் ஓட்டும் அனுபவமுடைய ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் குறைந்த சந்தா செலுத்துவர்.