காலை உணவுக்காக மோட்டார் சைக்கிளில் மலேசியாவுக்குச் சென்றுகொண்டிருந்த இளம் சிங்கப்பூரர் விபத்துக்குள்ளாகிய சில நாட்களில் உயிரிழந்தார்.
29 வயது பொது ஊழியராகப் பணிபுரியும் காய் யூ ஹெங்கும் அவரது நண்பரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். ஜோகூர் பாலத்தின் மலேசியப் பகுதியிலுள்ள மோட்டார் சைக்கிள் தடத்தில் அந்த விபத்து ஏற்பட்டதாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.
விபத்து குறித்த தகவல் காலை 10.30 மணிக்குக் கிடைத்ததாக ஜோகூர் பாரு போலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த அந்த ஆடவர் ஜோகூர் பாருவிலுள்ள சுல்தான் அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவம் விசாரிக்கப்பட்டு வருவதாக மலேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்த திரு காய், ஒரு வயது பெண் குழந்தையை விட்டுச் செல்வதாக அவரது சகோதரி தெரிவித்தார்.