அமெரிக்காவில் உள்ள தமது நண்பரிடம் பேசிய பிறகுதான் குளியல் அறையில் தன்னைக் காணொளி எடுத்த மாணவனைப் பற்றி வெளிப்படையாகப் பேச முடிவெடுத்ததாகக் கூறினார் தேசிய பல்கலைக்கழக மாணவி மோனிக்கா பே. குளியல் அறையில் தனக்கு நடந்ததை இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்தது தன்மீதான கவனத்தை அதிகரிப்பதற்காக அல்ல என்றார் பாதிக்கப்பட்ட அந்த 23 வயது இளம்பெண்.
"என் வாழ்க்கையில் உள்ளவர்கள், குறிப்பாக என் குடும்பத்தினரும் அதைவிட முக்கியமாகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சக மாணவர்களும், அவன் செய்தது பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். இவனைப் போன்றோருக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருந்து இத்தகைய சம்பவங்கள் தங்களுக்கு நடந்திராமல் இருக்க அவர்கள் கவனமாகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும்," என்று அவர் கூறினார்.
தொடர்பு மற்றும் புதிய ஊடகத்துறை மாணவியான குமாரி பே, தேசிய பல்கலைக்கழகம் வியாழக்கிழமை இரவு 600 மாணவர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குப் பேட்டி அளித்தார்.
'இது பற்றி இன்ஸ்டகிராமில் பதிவு செய்தது எனது கடைசி முயற்சியாக இருந்தது. இவனது தண்டனையின் கடுமை மிகக்குறைவாக இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவனது செயலால் நான் ஒவ்வொரு நாளும் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காததுபோல் இவன் பாட்டிற்கு இருக்கிறான்," என்று குமாரி பே கூறினார்.
"இது பழி வாங்குவது பற்றியது அல்ல. பல்கலைக்கழகம் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்லவில்லை. ஆயினும், நான் வாயடைக்கப்பட்டதாக உணர்ந்தேன். நடந்தது என்ன என்பதை எனக்குத் தெரிந்தவர்களிடம் வெளிப்படுத்த மட்டுமே நான் விரும்பினேன்," என்றார் அவர்.
மோனிக்கா பேயுடனான பேட்டியை விரிவாகப் படிக்க நாளைய தமிழ் முரசு இதழை வாசகர்கள் நாடலாம். அத்துடன், குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவன் நிக்கலஸ் லிம்மும் சம்பவம் குறித்த தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதனையும் அறிந்துகொள்ள நாளைய இதழைப் படிக்கலாம்...