சமூக ஆர்வலர் ஜோலோவன் வாமுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஜான் டான் லியாங் ஜூவுக்கும் தலா 5,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நீதித்துறையைப் பற்றி அவதூறாக எழுதியதற்காக அவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசியல் தொடர்பான வழக்குகளில் மலேசிய நீதிமன்றங்கள் சிங்கப்பூரின் நீதிமன்றங்களைக் காட்டிலும் நடுநிலையுடன் நடந்துகொள்வதாக வாம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். அவர் அந்தப் பதிவை வெளியிட்டதை அடுத்து தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
தலைமைச்சட்ட அதிகாரி அலுவலகத்தின் இந்தச் செயல் வாமின் கருத்தை உறுதி செய்வதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜான் டான் மே 6ஆம் தேதி, ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அவருக்கும் எதிராக அலுவலகம் வழக்கு தொடர்ந்தது.
இவ்விரு ஆடவர்களும் குற்றவாளிகள் என நீதிபதி வூ பி லி கடந்தாண்டு அக்டோபர் தெரிவித்தார். ஃபேஸ்புக் பதிவுகள் சிங்கப்பூரின் நேர்மையையும் நடுநிலையையும் சந்தேகிப்பதாக அவர் கூறினார்.