கரோசல் என்ற வலைத்தளத்தில் வெளிநாட்டு பணிப்பெண்கள் பற்றி பொருத்தமில்லாத விளம்பரங்களைப் பதிவேற்றியதற்காக எஸ்ஆர்சி ரெக்ரூட்மெண்ட் என்ற வேலை நியமன நிறுவனத்திற்கு $78,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அந்தத் தளத்தில் 2018 செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட விளம்பரங்கள், 49 வீட்டுவேலை பணிப்பெண்களை விற்பனைப் பொருட்களைப் போன்று காட்டின என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
16 குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்டது. அதற்கு செவ்வாய்க்கிழமையன்று $48,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதர வேலை நியமனக் குற்றங்கள் தொடர்பான 29 குற்றச்சாட்டுகளின் பேரில் அந்த நிறுவனத்திற்கு மேலும் $30,000 அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டபோது இதர 99 குற்றச் சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

