தன்னைக் குளியல் அறையில் காணொளி எடுத்த மாணவனைப் பற்றிய பதிவுகளை இன்ஸ்டகிராம் சமூக ஊடகத்தளத்தில் வெளியிட்ட மோனிக்கா பே, இப்போது அந்த மாணவனுக்கு எதிரான இணையத் துன்புறுத்தல்கள் நிறுத்தப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய பல்கலைக்கழத்தில் மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளதாக 23 வயது குமாரி பே இன்ஸ்டகிராமில் நேற்று தெரிவித்தார். தமது அனுபவத்தை வெளியிட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு அவர் அந்தப் பதிவில் பதிலடி கொடுத்துள்ளார்.
தேசிய பல்கலைக்கழகத்தின் 'யூசோஃப் ஹால்' தங்குமிட விடுதியில் தன்னைக் காணொளி எடுத்த நிக்கலஸ் லிம்முக்கு எதிராகப் பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்று குமாரி பே ஏப்ரல் 18ஆம் தேதி இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். அந்தப் பதிவில் லிம்மின் பெயரும் தனிப்பட்டத் தகவல்களும் வெளியிடப்பட்டன.
பல்கலைக்கழகம் நிக்கலஸ் லிம்மை ஒரு பள்ளித் தவணைக்கு நீக்கியது. போலிசார் லிம்முக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கையை விடுத்தனர். மேலும், குமாரி பேக்கு லிம் மன்னிப்புக் கடிதம் அனுப்பும்படியும் கேட்கப்பட்டிருந்தார்.