தமது தேவாலய நண்பர்களுடன் மாலத்தீவுகளுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த சிங்கப்பூரர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். மாலே பவளத்தீவின் வடக்குப்பகுதியில், உல்லாச விடுதி ஒன்றின் அருகிலுள்ள கடற்கரைக்காயலில் பல் மருத்துவர் டாக்டர் ஜிம்மி டேங் சியான் உயிரற்று மிதந்திருந்ததாக 'மால்டீவ்ஸ் இன்டிபென்டன்ட்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் போலிசாருக்கு திங்கட்கிழமை பிற்பகல் 12.39 மணிக்குக் கிடைத்ததாக அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாக்டர் டேங்கை அதிகாரிகள் தலைநகர் மாலேயிலுள்ள 'ஏடிகே' மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு சென்றபோதும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
பிரேத பரிசோதனை செய்யப்படாததால் டாக்டர் டேங் மாண்ட காரணம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஆயினும், நீரில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மூழ்கி இறந்ததாகக் கேள்விப்பட்டதாக அவர் நண்பர் ஒருவர் 'தி நியூ பேப்பர்' இதழிடம் தெரிவித்திருந்தார்.