உள்ளூர் நடிகர் அலோய்ஷியஸ் பாங் சுயமாகப் பாயும் 'ஹவிட்சர்' கவச வாகனத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது உயிரிழந்த சம்பவத்திற்கு மூன்று ராணுவ வீரர்களின் பாதுகாப்பு விதிமுறை மீறலே காரணம் என்று சம்பவத்தை விசாரித்த சுயேட்சை விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. கவச வாகனத்தின் பீரங்கி இறக்கப்படும்போது அனைவரும் பாதுகாப்பான இடங்களில் இருக்கவேண்டும் என்ற முக்கியமான விதிமுறையைப் பின்பற்ற அந்த மூவரும் தவறியதை அந்தக் குழு உறுதி செய்தது.
கவச வாகனத்தின் பீரங்கி இறக்கப்பட்டபோது அலோய்ஷியஸ் நசுங்கி படுகாயமடைந்தார். அவரது நுரையீரல்கள், இதயம், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகக் காயமடைந்தன. அவருக்கு செயற்கை உயிர்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டன. மருத்துவ சிகிச்சை பலனின்றி அலோய்ஷியஸ் ஜனவரி 23ஆம் தேதி உயிரிழந்தார். இந்த அசம்பாவிதத்திற்குக் காரணமான அந்த மூவரில் ஒருவர் முழுநேர தற்காப்புத் தொழில்நுட்பர். பராமரிப்புப் பணிகளின் தொடக்கத்திற்கு முன் பீரங்கி பூட்டப்பட்டதை உறுதி செய்ய அந்தத் தொழில்நுட்பர் தவறியதாக விசாரணைக்குழு கண்டுபிடித்தது.
நியூசிலாந்தில் நடத்தப்பட்ட 'தண்டர் வாரியர்' எனும் ராணுவப் பயிற்சியின்போது நேர்ந்த அவரது மரணத்தை விசாரிப்பதற்காக ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழு, ஜனவரி 25ஆம் தேதி அமைக்கப்பட்டது.
"பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் முதல் வகுப்பு கார்ப்பரல் (தேசிய சேவை) அலோய்ஷியாஸ் பாங்கின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது வருத்தமான ஆனால் மறுக்க முடியாத உண்மை," என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்தார். அலோய்ஷியஸ் பாங்கின் மரணத்திற்கு பீரங்கியில் பணிபுரிந்தவர்களின் அனுபவமின்மையோ விதிமுறைகள் குறித்த அறியாமையோ காரணமல்ல என்று டாக்டர் ஹெங் நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.