அடுத்த ஆண்டுக்குள் குறைந்தது இரண்டு '5ஜி' கட்டமைப்புகள் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யப்படும். ஓட்டுநரில்லாத கார்கள், மெய்நிகர் தொழில்நுட்பப் படைப்புகளின் பதிவிறக்கம் உள்ளிட்ட அடுத்தக்கட்ட தொழில்நுட்பப் பயன்பாடுகளுக்கு இந்தக் கட்டமைப்புகள் பயன்படுத்தப்படும். இந்தத் திட்டம் நிறைவடைந்தால் 5ஜி தொழில்நுட்பத்தை முன்கூட்டியே செயல்படுத்தும் நாடுகளில் சிங்கப்பூர் இடம்பெறும். இதற்கு வகைசெய்ய, முன்மொழிவுத் திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுக்குத் தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு திட்டங்களைச் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு '5ஜி' வானலைகள் ஒதுக்கப்படும் என்றது ஆணையம்.
ஏலத்திற்குப் பதிலாக முன்மொழிவுக்கான அழைப்பு வழியாக அந்த வானலைகள் ஒதுக்கப்படும். முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் நிறுவனங்கள், 2020ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் முழுவதும் 50 விழுக்காடு '5ஜி' கட்டமைப்பை இயக்க முடியுமா, '5ஜி' வானலைகளைப் பெறாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் கட்டமைப்புச் சேவையை விநியோகிக்க விரும்புமா உள்ளிட்ட சில தகுதிநிலைகளின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். '5ஜி' கட்டமைப்பை வழங்க அந்நிறுவனங்களிடம் நிதி உள்ளதா என்பதும் ஆராயப்படும்.
முன்மொழிவுக்கான அழைப்பு முறை குறித்து பொதுமக்களிடம் கருத்துத்திரட்டல் நடத்தப்படும் என்று தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. இந்தக் கருத்துத்திரட்டல் ஜூன் 19ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஆணையம் கூறியது.