தனியார் வீடுகளில் குறைந்தபட்ச காலமாக மூன்று மாதங்கள் தங்கவேண்டும் என்ற விதிமுறையில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்தகைய வீடுகளில் குறுகிய காலம் தங்குவது தொடர்பில் முன்மொழியப்பட்ட விதிமுறைகளுக்குத் தான் ஒப்புதல் அளிக்கப்போவதில்லை என்றும் ஆணையம் கூறியது.
குறுகிய காலம் தங்குவதற்கான விதிமுறை திட்டம் பற்றி பல்வேறு பங்காளிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணையம் கூறியது. திட்டத்திற்குப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் ஆதரவு தெரிவித்தபோதும் அதன் விதிமுறைகள் கடுமையாக இருப்பதாக வீட்டு உரிமையாளர்கள் சிலர் கருதுவதாக ஆணையம் தெரிவித்தது. ஆகவே, புதிய விதிமுறைகளுக்கு இப்போது ஒப்புதல் அளிக்காமல் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்கப் போவதாக ஆணையம் கூறியது.