கடல்வழியான பயங்கரவாத மிரட்டல் நிலவுகையில், கப்பல் போக்குவரத்து சுதந்திரத்திற்கும் கடல்துறை வளங்களுக்கும் உலக நாடுகள் மாறுபட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருவதால், அரசாங்கங்களுக்கும் ராணுவங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது அவசியம் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் செவ்வாய்க்கிழமை (மே 14) கூறினார்.
"கடலில் எந்த இடத்தில், எப்போது பூசல் ஏற்பட்டாலும், சுற்றுவட்டார நாடுகளும் பொதுமக்களும் அவதிப்படுவார்கள் என்பதைக் கடல்துறை வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ளது," என்றார் அவர்.
"கடலை நாம் பெரிதும் சார்ந்திருப்பதால், கடலுக்கும் அதன் பயன்பாட்டுக்கும் பொதுவான விதிமுறைகளை நிலைநாட்ட எல்லா நாடுகளும் வலுவான ஒப்புதலளிப்பது அவசியம்," என்று டாக்டர் இங் வலியுறுத்தினார்.
சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 12வது அனைத்துலக கடல்துறை தற்காப்பு கண்காட்சி, ஆசிய மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார்.
மொத்தம் 26 தற்காப்பு, கடற்படைத் தலைவர்கள், கடற்படைத் துணைத் தலைவர்கள், கடற்காவல் படை தலைமை இயக்குநர்கள் ஆகியோரும் 40க்கும் மேலான நாடுகளின் பங்கேற்பாளர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். எக்ஸ்பீரியா இவென்ட்ஸ் ஏற்பாடு செய்யும் மூன்று நாள் கண்காட்சியில் 230க்கும் மேலான நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளிலிருந்து 25 போர்க்கப்பல்கள் இந்நிகழ்ச்சிக்கென சிங்கப்பூருக்கு வந்துள்ளன.
வர்த்தகப் பூசல்கள், பாதுகாப்புப் பதற்றநிலைகள் உட்பட உலகில் நிச்சயமற்ற சூழல் நிலவிய போதிலும், கடல்வழியாக வர்த்தகத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, எதிர்காலத்திலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடல்துறை பயங்கரவாதம், கடற்கொள்ளை, ஆயுதம் தாங்கிய கொள்ளை, போதைப்பொருள், ஆயுதம், ஆள் கடத்தல் போன்ற வழக்கமான கடல்துறை மிரட்டல்கள் நீடித்து வந்தாலும், மேம்பட்ட ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்பும் இப்பிரச்சினைகளை ஒடுக்க ஓரளவு உதவியிருப்பதாக டாக்டர் இங் கூறினார்.

