உணவு விநியோக ஓட்டுநர்களாக சிங்கப்பூரில் சட்டவிரோதமாக பணிபுரிந்த இரு மலேசியர்கள் பிடிபட்டதையடுத்து 'ஃபுட்பேன்டா', 'டெலிவரூ' ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் விசாரிக்கப்படுகின்றன.
முறையான வேலை அனுமதிச் சீட்டின்றி பணிபுரிந்ததாக இரு மலேசியர்கள் பிடிபட்டதைத் தொடர்ந்து இங்கு செயல்படும் அனைத்து உணவு விநியோக நிறுவனங்களும் அவற்றின் நடைமுறைகளைக் கடுமைப்படுத்துமாறு மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டது.
தகவல் கிடைத்ததன் பேரில் கடந்த மாதம் 25ஆம் தேதி 313@சாமர்செட்டில் அமைச்சு அதிரடி சோதனையை நடத்தியது. சமூக வருகை அனுமதியில் இங்கு வந்திருந்த 24 வயது மலேசிய ஆடவர் ஒருவர், அவரது சிங்கப்பூர் நண்பர் ஒருவரது 'டெலிவரூ' கணக்கைப் பயன்படுத்தி உணவு 'ஆர்டர்'களைப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.