புக்கிட் மேரா வியூவில் கடந்த வெள்ளிக்கிழமை குடையைப் பயன்படுத்தி ஒரு வீட்டிலிருந்து கைபேசியைத் திருட முயன்றதாக 54 வயது ஆடவர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அன்று காலை 8.30 மணியளவில் தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
அந்த வீட்டின் மேசையில் கைபேசி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆடவரின் முயற்சியை வீட்டின் உரிமையாளர் கண்டவுடன் ஆடவர் அந்த இடத்தைவிட்டு தப்பிவிட்டார்.
போலிஸ் கண்காணிப்புக் கருவிகளின் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அந்த ஆடவரை அடையாளம் கண்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
வெளியிலிருந்து எட்டும்படி வீட்டின் சன்னல்கள் அல்லது கதவுகளுக்கு அருகில் உடமைகளை வைக்க வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு போலிஸ் நினைவூட்டுகிறது. வெளியே செல்லும்போது கதவுகள், சன்னல்கள் அனைத்தையும் பூட்டிவிட்டு செல்லுமாறும் போலிஸ் அறிவுறுத்துகிறது. பெரிய அளவிலான பணத்தையும் வீட்டில் விட்டுச்செல்வதையும் வீட்டு உரிமையாளர்கள் தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.