துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட், தனது பெயரைப் பயன்படுத்தி இணையத்தில் பரவிவரும் பொய்ச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். "தவறான எண்ணத்தைத் தூண்டும் கருத்துகளுடன் பல பொய்ச் செய்திகளை" இணையத்தில் கவனித்திருப்பதாக வெள்ளிக்கிழமை (மே 17) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் திரு ஹெக் தெரிவித்தார்.
"நான் ஒரு புதிய நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் ஒரு செய்தி கூறுகிறது. இவை அனைத்தும் உண்மையல்ல," என்றார் நிதி அமைச்சருமான திரு ஹெங். "நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் ஒருவரைச் செல்வந்தராக்கக்கூடிய புதிய நிறுவனத்தில் 6 மில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறார்" என்ற தலைப்பில் சிஎன்என் வெளியிட்டதாகக் கூறும் செய்தியின் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக் பதிவில் திரு ஹெங் வெளியிட்டார்.
மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தனது ஃபேஸ்புக் பதிவில் இதேபோன்ற தகவலை வெளியிட்டு இரண்டே நாட்களில் திரு ஹெங்கும் இதுபற்றி பேசியிருக்கிறார். தனிப்பட்ட அல்லது நிதித் தகவல் சேகரிப்பதற்காகப் போலி இணையத்தளம் ஒன்று தனது பெயரைப் பயன்படுத்தியதாகத் திருவாட்டி டியோ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.இணையத்தில் செய்திகளைப் படிக்கும்போது கவனமாக இருக்கும்படியும், மோசடிகளுக்கு இலக்காவதைத் தவிர்க்கும்படியும் சிங்கப்பூரர்களிடம் திரு ஹெங் வலியுறுத்தினார்.
"தகவலின் மூலத்தைச் சரிபாருங்கள், குறிப்பாகக் கடன்பற்று அட்டை எண்கள், மறைச்சொற்கள் போன்ற தனிப்பட்ட, நிதித் தகவல்களைத் தருவதற்கு முன்பாக," என்றார் அவர்.