ஒரு நாளுக்கு 600 பயணிகள் வரை சாங்கி விமான நிலையத்திற்குச் சென்று ஜுவல் வளாகத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காகவே தங்களது பயணப்பதிவை முன்கூட்டியே செய்வதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்துள்ளது.
ஜுவல் வளாகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வழிசெய்யும் பயண முகப்புகள், பயணிகளிடையே பிரபலமாகி வருவதாகக் கூறப்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஃபிலிப்பீன் ஏர்லைன்ஸ், கத்தார், குவான்டாஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவதாகக் குழுமத்தின் பேச்சாளர் ஐவன் டான் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
முன்கூட்டியே பயணப்பதிவு செய்யும் வசதியைப் பயன்படுத்தும் பயணிகளில் பத்தில் எட்டு பேர் புதிய பயணிகள். அவர்களில் பத்து பேரில் ஒன்பது பேர் வெளிநாட்டினர். ஆஸ்திரேலியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் ஆகியோர் இந்த வசதியை ஆக அதிகமாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தங்கள் பயணத்திற்கு மூன்று மணி நேரம் முதல் ஐந்து மணி நேரத்திற்கு முன்னதாகவே பாதிக்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் பயணப்பதிவைச் செய்து முடிக்கின்றனர்.
இவ்வாண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதிக்குள் ஜெட்ஸ்டார் ஏஷியா, ஜெட்ஸ்டார் பசிஃபிக், ஜெட்ஸ்டார் இன்டர்நேஷனல், எல்ஓடி போலிஷ், பின்ஏர் ஆகிய ஐந்து விமான நிறுவனங்கள் ஜுவலில் பயணப்பதிவை முன்கூட்டியே செய்வதற்கான வசதியைத் தங்கள் பயணிகளுக்கு வழங்கும். அதன் பின்னர், விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானப் பயணங்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டில் செல்லும் பயணிகள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்றது குழுமம்.