கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் 'துவாஸ்ப்ரிங்' ஆலையின் நிர்வாகத்தை ஏற்றுள்ள பொதுப்பயனீட்டுக் கழகம், பழுதாக இருக்கும் சவ்வுகளை மாற்றும் பணியைத் தொடரவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம். இதற்காக அந்த ஆலை 36 ஊழியர்களை மறுபடியும் வேலையில் அமர்த்தியது. பொதுப்பயனீட்டுக்கழகத்தின் நீர் விநியோக ஆலைகளுக்கான இயக்குநர் திரு பெர்னாட் கோ இந்த ஊழியர்களை செவ்வாய்க்கிழமை காலை ( மே 21ஆம் தேதி) வரவேற்றார்.
அவர் அந்த ஊழியர்களிடம் உரையாற்றுகையில் "ஆலையின் நிர்வாகத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டது மே 18ஆம் தேதி என்றாலும் இன்றுதான் வேலைக்கான முதல் நாள். உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு குறிக்கோள்: நல்ல தண்ணீரை விநியோகிப்பது. எங்களுக்கு மிக நல்ல குழு ஒன்று அமைந்துள்ளது என நான் நம்புகிறேன். இந்த ஆலைக்குப் புதுப்பிப்புப் பணிகளும் பராமரிப்புப் பணிகளும் தேவைப்படுகிறது. தற்போதுள்ள நிலவரம் உங்களுக்கு தெரியும். ஒன்றாக நாம் இணைந்து ஒரு நாளுக்கு 70 மில்லியன் கெலன் அளவு நீரை விநியோகிக்க முனைவோம்," என்றார்.
'ஹைஃப்லக்ஸ்' தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் 'துவாஸ்ப்ரிங்' ஆலைக்கும் இடையிலான தண்ணீர் வாங்கல் ஒப்பந்தத்தின் ரத்துக்குப் பிறகு நிறுவனத்தின் நிர்வாகம் பொதுப்பயனீட்டுக் கழகத்திற்குக் கை மாறியது. 'துவாஸ்ப்ரிங்' ஒருங்கிணைந்த தண்ணீர் மற்றும் மின்சார விநியோக ஆலையில் கடல்நீரைக் குடிநீர் ஆக்கும் இந்த ஆலை அங்கம் வகிக்கிறது. 'ஹைஃப்லக்ஸ்' நிறுவனத்தின் 1.05 பில்லியன் வெள்ளி செலவில் ஒருங்கிணைந்த ஆலை உருவானது.
ஒப்பந்தத்தின்படி ஒரு நாளுக்கு 70 மில்லியன் கெலன் நீரை 'துவாஸ்ப்ரிங்' விநியோகிக்கவேண்டும். 2013ஆம் ஆண்டு முதல் 2038ஆம் ஆண்டுவரை இந்த ஒப்பந்தம் செல்லுபடியாக உள்ளது. இந்த அளவு நீர், சிங்கப்பூரில் தினசரி தேவைப்படும் தண்ணீர் அளவில் 16 விழுக்காடாக உள்ளது.
ஆனால் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆலையை இயக்குவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியது 'ஹைஃப்லக்ஸ்' நிறுவனம். இதனைத் தீர்ப்பதற்குத் தேவையான நிதியில்லாமல் அந்நிறுவனம் திண்டாடியது.