கடல்நீரைக் குடிநீராக்கும் 'துவாஸ்ப்ரிங்' ஆலையின் நிர்வாகத்தை ஏற்றுள்ள பொதுப் பயனீட்டுக் கழகம், பழுதாக இருக்கும் சவ்வுகளை மாற்றும் பணியைத் தொடங்கவுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அந்த ஆலை தொடர்ந்து உற்பத்தி செய்வதை உறுதி செய்வதே இந்த மேம்பாட்டுப் பணியின் நோக்கம். இதற்காக பொதுப் பயனீட்டுக் கழகம் 36 ஊழியர்களை மறுபடியும் வேலையில் அமர்த்தியது. கழகத்தின் நீர் விநியோக ஆலைகளுக்கான இயக்குநர் பெர்னட் கோ, ஊழியர்களை நேற்று காலை வரவேற்றார்.
ஊழியர்களிடம் அவர் உரையாற்றுகையில், "ஆலையின் நிர்வாகத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டது இம்மாதம் 18ஆம் தேதி என்றாலும் இன்றுதான் (நேற்று) வேலைக்கான முதல் நாள். உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு குறிக்கோள்: நல்ல தண்ணீரை விநியோகிப்பது. எங்களுக்கு மிக நல்ல குழு ஒன்று அமைந்துள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன்," என்றார்.