கடல்துறை எரிபொருள் எண்ணெய் விற்பனையில் சட்டவிரோதமாக ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூரோங் தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செவ்வாய்க்கிழமை கடல்துறை, துறைமுக ஆணையமும் கடற்கரை காவற்படையும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைதானதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் இருபது வயதுக்கும் நாற்பத்தெட்டு வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அந்த எழுவரில் மூவர் கடல்துறை சேவை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் என்றும் மற்ற நால்வர், வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்றின் (tugboat) பணியாளர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடல்துறை நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது நிறுவனத்திற்குத் தெரியாமல் கிட்டத்தட்ட 3,000 கிலோகிராம் எரிபொருள் எண்ணெய்யை எடுத்து அதனை விற்க முயன்றதாக நம்பப்படுகிறது. நீதிமன்றத்தில் அவர்கள் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்படும். அந்தக் குற்றம் நிரூபனமானால் அவர்கள் 15 ஆண்டு சிறைத்தண்டனையுடன் அபராதத்தையும் எதிர்நோக்கலாம். வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட படகின் பணியாளர்கள் மீது திருடப்பட்ட பொருட்களை நேர்மையற்ற முறையில் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.