ஈசூன் அவென்யூ 11லுள்ள புளோக் 430பி-யின் கீழ்த்தளத்தில் திங்கட்கிழமை (மே 27ஆம் தேதி) காலை பூனை ஒன்று மாண்டு கிடக்கக் காணப்பட்டது. பூனையின் பாதி உடல் சவரம் செய்யப்பட்டிருந்தது. அதன் சடலத்தைச் சுற்றிலும் ரத்தக் கறைகள் படிந்திருந்தன. செம்பவாங் நகர மன்றம் இந்தச் சம்பவம் பற்றி போலிசாரிடமும் விலங்கு வதை தடுப்புச் சங்கத்திடமும் தெரிவித்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் கூறியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கான சாட்சிகள் எவரேனும் இருந்தால் விலங்குநல மருத்துவச் சேவையுடன் தொடர்புகொள்ளுமாறு நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங் குவோக் குவாங் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்த தமது பதிவில் திரு இங், "மற்றுமோர் உயிர் போனது. அளவுக்கு அதிகமான பூனைகள் கொல்லப்பட்டன அல்லது கைவிடப்பட்டுள்ளன. இதற்கு ஒரு முடிவு வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 'ஏக்கர்ஸ்' விலங்கு நல அமைப்பின் தலைமை நிர்வாகியாகத் திரு இங் பொறுப்பாற்றுகிறார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க உதவும் தகவலைத் தருபவர்களுக்கு 1,000 வெள்ளி வெகுமதி அளிக்கப்படும் என விலங்கு வதை தடுப்புச் சங்கம் அறிவித்துள்ளது. அத்தகைய தகவலை அறிந்தவர்கள் 6287 5355 என்ற தொலைபேசி எண் வழியாகவோ inspector@spca.org.sg என்ற மின்னஞ்சல் வழியாகவோ சங்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
கட்டடக் கீழ்த்தளத்தில் பூனையின் சடலம்; உதவிக்குக் கோரிக்கை
1 mins read
-

