அமெரிக்க விரைவு உணவு நிறுவனமான 'ஏ அண்ட் டபள்யூ' (A&W), சிங்கப்பூரில் தனது இரண்டாவது கிளையை 'அங் மோ கியோ ஹப்' கடைத்தொகுதியில் வரும் ஜூலை மாதம் திறக்க உள்ளது.
கடைத்தொகுதியின் முதலாம் அடித்தள மாடியில் (basement one) அந்தக் கிளை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமையவிருக்கும் கிளையில் 142 பேர் வரை அமர்ந்து சாப்பிடலாம்.
இதுவரை சிங்கப்பூரிலுள்ள ஒரே ஒரு கிளை தற்போது சாங்கி விமான நிலையத்தின் ஜுவல் வளாகத்தில் மட்டுமே உள்ளது.
பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பியுள்ளது 'ஏ அண்ட் டபள்யூ'. சிங்கப்பூரில் 1966ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த 'ஏ அண்ட் டபள்யூ' மற்ற விரைவு உணவு நிறுவனங்கள் கொடுத்த போட்டியின் காரணமாக 2003ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சந்தையைவிட்டு வெளியேறியது.

