சிங்கப்பூரர்களில் ஐவரில் கிட்டத்தட்ட இருவர் பச்சைக்குத்தியவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளும் சாத்தியம் குறைவாக உள்ளது.பச்சைக்குத்தியுள்ள ஒருவருக்கு வேலை கிடைக்கும் சாத்தியம் குறைவாக இருப்பதாக யூகவ் (YouGov) எனும் சந்தை ஆய்வு, தரவு பகுப்பாய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு காட்டுகிறது.
"வேலையிடங்களில் சிங்கப்பூரர்கள் பச்சைக்குத்து பற்றிய பழமைவாதக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர்," என்று ஆய்வு கூறுகிறது. ஆய்வு செய்யப்பட்டவர்களில் வெறும் பத்து விழுக்காட்டினர் மட்டுமே பச்சைக்குத்தியுள்ளனர். அதோடு, வேலைக்குத் தகுதி பெற்றிருந்தாலும், பச்சைக்குத்தியவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ளும் சாத்தியம் ஓரளவு குறைவு (37%) அல்லது வெகுவாகக் குறைவு (10%) என்று கிட்டத்தட்ட பாதி பேர் (47%) பதிலளித்தனர்.
இந்தத் திடமான நம்பிக்கை 18 முதல் 24 வயதுடைய இளைய தலைமுறையினரைவிட (33%) 55 வயது முதலானவர்களிடையில் (59%) அதிகமாகக் காணப்படுகிறது.ஆய்வு செய்யப்பட்டவர்களில் 48 விழுக்காட்டினர், வேலைக்கு ஆள் சேர்க்கும்போது பச்சைக்குத்துகளை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை என்று உறுதியாகக் கூறினார்கள். ஐந்து விழுக்காட்டினர் பச்சைக்குத்தியவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பதிலளிக்கவில்லை.
முகத்தில் பச்சைக்குத்தி இருப்பதே ஒருவரின் வேலை வாய்ப்பை ஆக அதிகமாகப் பாதிக்கக்கூடும் (87%). அதனைத் தொடர்ந்து கழுத்து (73%), கை (61%), முன்கை (59%) ஆகியன பாதிக்கின்றன. முதுகிலுள்ள பச்சைக்குத்துகளால் ஆகக்குறைவான பாதிப்புள்ளதாக (11%) ஆய்வு காட்டுகிறது.
"பத்தில் அறுவர் (58%) வேலையிடத்தில் பச்சைக்குத்துகளை மூடிமறைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பத்தில் எழுவர் (70%) குறிப்பிட்ட சில வேலைகள் பச்சைக்குத்தியிருப்பவர்களுக்குப் பொருத்தமற்றவை என்று நம்புகிறார்கள்," என அறிக்கை தெரிவித்தது. ஒருவரின் வேலை வாய்ப்புக்குப் பச்சைக்குத்து தடையல்ல என்று பாதி பேர் (50%) கருதுகின்றனர்.

