தனது பிள்ளைகளுக்கு அருகில் ‘முரட்டுத்தனமாக’ விளையாடிய ஆட்டிசம் குறைபாடுள்ள ஐந்து வயது சிறுவனைத் தாக்கிய தந்தை ஒருவருக்கு நேற்று ஒரு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சூ வென் ஜி எனும் அந்த 29 வயது ஆடவர் அந்தச் சிறுவனின் வயிற்றில் உதைத்ததுடன் அவனிடமிருந்த விளையாட்டுப் பொருளைப் பிடுங்கி, அவனைத் தள்ளி விட்டதில் சிறுவன் அருகில் இருந்த சறுக்கு மேடையில் விழுந்தான். இந்தச் சம்பவம் காணொளியில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஈசூன் அவென்யூ 2ல் உள்ள சன்ஷைன் சைல்ட்ஹூட் பிளேலேண்ட் எனும் இடத்தில் நடந்த இச்சம்பவத்தால் மனத்தளவில் பாதிக்கப்பட்ட அச்சிறுவன் பின்னர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டியதாயிற்று. சூ, தனது மனைவி யுடனும் தனது இரு பிள்ளைகளுடன் அந்த இடத்துக்குச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.