படிப்புத்திறன் அடிப்படையில் மாணவர்களைப் பல்வேறு வகுப்புகளாகப் பிரிக்கும் அணுகுமுறையைப் பல தொடக்கப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படுத்தி வந்தாலும் சில பள்ளிகள் இந்த முறையிலிருந்து மெல்ல வெளிவருகின்றன.
வெவ்வேறு திறன்களைக் கொண்ட மாணவர்களை ஒரே வகுப்பில் சேர்க்க 'அய் டோங்' பள்ளி, 'செயிண்ட் ஹில்டாஸ்' தொடக்கப்பள்ளி, 'கத்தோலிக் ஹை' பள்ளி ஆகியவை முடிவு செய்துள்ளன.
உயர்நிலைப்பள்ளிகளில் வழக்கநிலை (தொழில்நுட்பம்), வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), விரைவுநிலை ஆகிய பிரிவுகளை 2024ஆம் ஆண்டுக்குள் நீக்க கல்வி அமைச்சு முடிவு செய்ததை அடுத்து இந்தத் தொடக்கப்பள்ளிகள் இத்தகைய ஏற்பாட்டினை செய்துள்ளன.
பல்வேறு திறன்களைக் கொண்ட மாணவர்கள் ஒரே வகுப்பில் சேர்க்கப்படுவதால் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகும் வாய்ப்பைப் பெறுவதாகச் சில பெற்றோர்கள் கருதுவதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. ஆயினும், இதே ஏற்பாட்டினால் திறமையான மாணவர்கள் பின்தங்கிவிடக் கூடும் என்பது வேறு சில பெற்றோர்களின் அச்சம்.

